தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பை கடைசி வரை விரும்பாதவர் ஜெயலலிதா எனவும், தற்போதைய பினாமி அரசு வரியை உயர்த்திருப்பது தவறான கொள்கை முடிவு என முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நாளை காலை 11 மணக்கு ஓ.பி.எஸ் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும், தங்கள் அணிக்கு வெற்றி வாய்பிருப்பதாகவும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில், சட்டமன்றத்தில் மறைமுக வாக்கெடுப்பிற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை உணர்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும் என்றார்.
பொதுச்செயலாளர் தேர்தல் நீதிமன்ற உத்திரவு படியோ தேர்தல் ஆணைய உத்திரவுபடியோ நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், வெகுவிரைவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்வு அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்குகள் கேட்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களின் ஆவல் எனவும் தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக தங்களுக்கு ஜெயலலிதா ஆன்மாவின் ஆசியுடன் கிடைக்கும் என நம்புவதாக கூறிய அவர், கல்வி துறையின் செயல்பாடுகள் ஜெயலலிதா விரும்பிய படி இருக்க வேண்டும் எனவும் பல சவால்கள் கல்வித்துறை முன்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.